Opening of information board about ancient inscription

350 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி தேவாலயத்துக்கும், குருக்களுக்கும், சிஷ்யர்களுக்கும் எட்டயபுரம் பாளையக்காரர்களான செகவீர மற்றும் திசவீர எட்டப்ப நாயக்கர்கள் பாதுகாப்புக் கொடுத்ததைத் தெரிவிக்கும் பழமையான கல்வெட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல் பலகையைப் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ச.அந்தோணிசாமி திறந்து வைத்தார்.

Advertisment

எட்டயபுரம் பாளையக்காரர் செகவீர எட்டப்பநாயக்கர் கி.பி.1663ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு தன்னுடைய சீமையில் உள்ள சறுவேசுரன் கோவில் மற்றும் ரோமாபுரி சன்னாசிகள் மடம் ஆகியவற்றிற்கு எந்த இடையூறுமின்றி அதற்குப் பாதுகாப்புக் கொடுத்து நடத்திக் கொண்டு வந்திருக்கிறார். தன் தகப்பனார் செய்ததை, தானும் அப்படியே தொடர்ந்து நடத்த விரும்புவதாக, இந்தக் கோவிலுக்கு வந்து இங்கிருந்த குருக்களை கி.பி.1688-ம் ஆண்டு சித்திரை மாதம் 10-ம் நாள் சந்தித்து அதைக் கல்வெட்டாகவும் வெட்டிக் கொடுத்துள்ளார் அவர் மகன் திசவீர எட்டப்ப நாயக்கர். இக்கல்வெட்டு தேவாலய முன் வாசலின் தென்பகுதியில் பதித்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் படியெடுத்துப் படித்து ஆய்வு செய்து பழைய கல்வெட்டின் ஒவ்வொரு வரியையும் தற்போதைய எழுத்தில் எழுதிக் கொடுத்தனர். அதன் வரலாற்றுப் பின்னணி உள்ளிட்ட விவரங்களைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பழமையான கல்வெட்டின் மேற்பகுதியில் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளது. இதைப் பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ச.அந்தோணிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது வே.ராஜகுரு, சு.சிவகுமார் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் திருத்தல அதிபர் அந்தோணி குரூஸ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஆலய முன்னாள் பங்குத்தந்தையர் அருள் அம்புரோஸ், அந்தோணிசாமி, மறைமாவட்ட செயலக முதல்வர் ஞானப்பிரகாசம், கோவில்பட்டி வட்டார அதிபர் மோட்சராஜன், கோவில்பட்டி பங்குத்தந்தை சார்லஸ் உள்ளிட்ட பங்குத்தந்தையர்கள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisment