Skip to main content

பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் திறப்பு! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

salem


கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், தற்காலிக பழைய பேருந்து நிலைய வளாகங்களில் கரோனா தொற்று நோய்த்தடுப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார். 
 


சேலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொற்று நோய்த்தடுப்பு உதவி மையத்தின் செயல்பாடுகளைத் துவக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து ஆணையர் சதீஸ் மேலும் கூறியது: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய் அறிகுறிகள் மற்றும் நோய் பரவும் விதத்தைக் கண்டறிந்து, அவற்றில் இருந்து காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜுன் 1ஆம் தேதி முதல், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் தளர்த்தி, பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பேருந்து நிலையங்களில் தீவிர தொற்று நோய்த்தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசு வலியுறுத்தி உள்ளது.
 

 

 


அதன்படி, சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பழைய பேருந்து நிலைய வளாகங்களில் கரோனா நோய்த்தடுப்பு உதவி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்களுக்குள் வரும் பொதுமக்கள் கைகளைச் சுத்தமாக கழுவிடும் வகையில் பேருந்து நிலைய வளாகத்தில் நுழைவாயில்கள் உள்ளிட்ட 3 இடங்களில் கைகள் கழுவுவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கைகளைச் சுத்தம் செய்வதற்கான கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கைகளை கழுவிய பிறகு, அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் மாநகராட்சி பணியாளர்களால் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். 

நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பொதுமக்களில் காய்ச்சல், தொற்று தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படுவோர், இந்த உதவி மையங்களை அணுகினால் உரிய ஆலோசனைகளை வழங்க மருத்துவக் குழுவினர் அமர்த்தப்பட்டு உள்ளனர். 
 

http://onelink.to/nknapp


பேருந்து நிலையங்களுக்குள் வரும் அனைவருக்கும் கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் மற்றும் பரவும் விதத்தைக் கண்டறிந்து, தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். பேருந்து வளாகங்களைச் சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, பேருந்துகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்ட பிறகே, பயணிகள் ஏறி அமர அனுமதிக்கப்படுகின்றனர். பேருந்துகளில் இருக்கைகள், இரும்புக் கம்பிகள், கைப்பிடிகள், படிக்கட்டுகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இவ்வாறு ஆணையர் சதீஸ் கூறினார்.

முன்னதாக, பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் கிருமி நாசினி தெளிப்புப் பணிகளை ஆணையர் சதீஸ் நேரில் ஆய்வு செய்தார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்; திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Youth lost their life at Trichy Central Bus Station
கோப்புப்படம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்குச் செல்ல பரபரப்புடன் இருந்தனர். அப்பொழுது மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஒரு மஞ்சள் நிற சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் சாலையின் நடுவே இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ் வாலிபரை கடக்க முயன்றபோது திடீரென்று அந்த வாலிபர் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தலையை விட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பஸ்சின் பின் சக்கரம் அந்த வாலிபரின் தலையில் ஏறி நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நேரில் பார்த்த பயணிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

முதலில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசார் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேமராவில் மத்திய பேருந்து நிலைய பகுதியில் மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு வாலிபர் நின்று கொண்டிருப்பதும் திடீரென்று தனியார் பஸ் அந்த வழியாக வரும் பொழுது பஸ்சின் பின் சக்கரத்தில் திடீரென்று பாய்ந்து தலையை விட்டு உடல் நசுங்கி இறந்ததும் தெரிய வந்தது.

இறந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ன காரணத்துக்காக தற்கொலை முயற்சி செய்தார் என்ற முழு விவரம் தெரியவில்லை. பிறகு போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் பெயர் ரமேஷ் (வயது 42) திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் ஹோட்டல் வியாபாரம் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மனமுடைந்து பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதற்கு இடையில், அந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.