வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்குள் வந்து பட்டினியால் கிடந்தால் என்னாவது..? அதுவும் நெல்லுக்கு வேலிப்போட்ட நெல்லையில் பட்டியினியில் இருக்கலாமா..? என மாநகர சந்திப்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்த மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தொடர்ந்து தங்கு தடையின்றி உணவினை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது நெல்லை மாநகர காவல்துறை.
கரோனா நோய் தொற்று விழிப்புணர்வு காரணமாக நாடெங்கிலும் ஏற்பட்ட ஊரடங்கின் விளைவாக அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ அன்றாடங்காய்ச்சிகளே. மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து கம்பளி போர்வை, பெல்ட் ஆகியவனவற்றை விற்பனை செய்து வருவாய் ஈட்டும் 25 குடும்பங்கள் திருநெல்வேலி சந்திப்பில் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வருகின்றது. தினசரி வருவாய் இருந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும் என்ற கோட்பாட்டிற்குள் வரும் இவர்களையும் கரோனா விட்டு வைக்கவில்லை. சாலையில் திரியக்கூடாது, வியாபாரம் கூடாது என்று அறிவித்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 குடும்பங்களையும் அழைத்து சந்திப்பு பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விடுதியில் தங்க வைத்தது. கரோனா நோய் தொற்று வரக்கூடாது என ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தவர்கள் ஏனோ அவர்களின் உணவிற்கு வழி வகுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 குடும்பத்தாருக்கும் சரிவர சாப்பாடு கிடைக்கவில்லை" என உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மூலம் மாநகர காவல்துறைக்குத் தெரியவர, திருநெல்வேலி மாநகர சந்திப்பு காவல்துறை ஆய்வாளர் பெரியசாமியின் முயற்சியின் காரணமாக, உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் இணை ஆணையர் சரவணன் ஒன்றிணைய, மாநகராட்சிக்கு சொந்தமான விடுதிக்கே வந்து அந்த குடும்பத்தினருக்குத் தேவையான அரிசி, கோதுமை மாவு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்வித்திருக்கின்றது நெல்லை மாநகர காவல்துறை.
ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் வாலிபர்களை கண்டிக்கும் நோக்கில் போலீசார் லத்தியால் அடிக்கும் வீடியோ நாடெங்கும் வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவமும் வைரலாகியுள்ளது. " நாங்களும் உங்களைப் போல கடுமையானவர்கள் அல்ல, உங்களுக்கு சேவை புரியக்காகத் தான் நாங்கள் என மனிதத்தை வளர்க்கும் காவல்துறையினரை புரிந்து கொள்வார்களா ஊர் சுற்றும் இளைஞர்கள்.