கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டிற்குத் தடை விதித்து சட்டம் ஒன்றை முந்தைய அதிமுக அரசு நிறைவேற்றியது. ஆனால் அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்தபோதிலும், ‘இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களைச் சட்டத்தை நிறைவேற்றும்போது கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது’ என்று கூறி, தமிழ்நாடு அரசின், ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின், ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தற்போதைய திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.