Skip to main content

ஆன்லைன் ரம்மி- முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

Online Rummy- Report Submission to the Chief Minister!

 

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. 

 

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு சமூகப் பொருளாதார குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன. 

 

இதையடுத்து, கடந்த ஜூன் 10- ஆம் தேதி அன்று ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதுப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட தமிழக முதலமைச்சர் ஆணையிட்டார். 

 

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன் ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே இ.கா.ப. ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

 

இக்குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் அளித்தது. இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று (27/06/2022) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்கள் காதுகள் பாவம் இல்லையா?” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
CM Stalin's speech at election campaign in vadachennai for lok sabha election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

தமிழகத்தில் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். 

இந்த நிலையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர்  கலாநிதி வீராசாமியை ஆதரித்து இன்று (15-04-24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க.வுக்கும், வட சென்னைக்குமான உறவு தாய் - சேய் உறவு போன்றது. என்னை முதலமைச்சராகிய கொளத்தூர் தொகுதியை உள்ளடக்கியது வடசென்னை.

பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? என்பதை மக்களின் முடிவு தான் தீர்மானிக்கும். ஓர் இரவில் ஊழலை ஒழிக்க போவதாக அவதார புருஷராக தோன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி தொழில் முனைவோரையும் மத்திய தர மக்களையும் மோடி கொடுமைப்படுத்தினார். கொரோனாவை ஒழிக்க, இரவில் விளக்கு ஏற்ற கூறியும், மணி அடிக்க கூறியும் ஏதோ விஞ்ஞானி போல் மோடி பேசினார். நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. 

பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன். நாட்டுக்கு வரப்போகும் ஆபத்துக்கான ட்ரெய்லர்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை. பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறிய வாக்குறுதிகளைப் பாஜக நிறைவேற்றியதா? இந்தியாவில் இதுவரை 14 பேர் பிரதமராக இருந்துள்ளனர். ஆனால் மோடி போல் மோசமான பிரதமர் யாருமில்லை. விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி பணம் வசூலித்து வசூல்ராஜாவாக மோடி திகழ்கிறார். தொழில் முனைவோர்களையும் மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்குவது பாஜகவின் வாடிக்கை.

இதுவரை இருந்த பிரதமர்களில் மோடியைப் போன்ற மோசமான பிரதமரை நாடு பார்த்ததில்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை வைத்து கட்சிகளை உடைப்பது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, முதல்வர்களை கைது செய்வதைத்தான் மோடி செய்கிறார். விவசாயிகளுக்காக எந்த ஒரு வாக்குறுதியையும் பாஜக வழங்கவில்லை. வாக்குக்காக மலிவான அரசியலை மோடி செய்து வருகிறார். நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் சுய விளம்பரத்துக்கு மட்டுமே மோடி முக்கியத்துவம் தருகிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மோடியல்ல யாருமே முடிவு செய்யக்கூடாது.

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய சிறு, குறு தொழில்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழில்துறை சரிவை சரிசெய்ய மோடி நடவடிக்கை எடுத்தாரா? தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கிய போது மோடி ஏன் மௌன குருவாக இருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையை தேர்தலுக்கு முன்பே கட்டி முடித்து விடுவோம் என்று எண்ணம் மோடிக்கு வந்ததா? வெறும் ரோடு ஷோ மட்டும் காட்டிவிட்டு செல்வதற்கு பிரதமர் மோடி வெக்கப்பட வேண்டாமா? கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 10.5 லட்சம் கோடி கொடுத்துள்ளதாக பச்சை பொய் சொல்லி விடுவது பாஜக. மெட்ரோ திட்ட பணிகள் நின்று விடக்கூடாது என்பதற்காக மாநில அரசே நிதி ஒதுக்கி செலவு செய்கிறது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மோடி அரசு நிதி தராமல் இழுத்து அடித்து இருக்கிறது. மாநில அரசுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி விட்டு ரூ.2 லட்சம் கோடியை கொடுத்து விட்டோம் என்கிறது பாஜக. எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும்? எங்கள் காதுகள் பாவம் இல்லையா? 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாதனைகளையும் மோடி பட்டியலிட தயாரா? ஏழை மக்களுக்காக பார்த்து பார்த்து பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மற்றொரு பக்கம் ஏழை மக்களே நடுத்தெருவில் நிறுத்துவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், ஜி.எஸ்.டியை விதித்து ஏழை மக்களிடம் கருணையற்ற வகையில் ஒன்றிய பாஜக அரசு நடந்து கொள்கிறது” எனப் பேசினார். 

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.