Skip to main content

‘பணியில் இருக்கும்போது 'ஆன்லைன் ரம்மி' விளையாடினால்..’- தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் எச்சரிக்கை!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

online rummy police circular issued

 

‘ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இணையுங்கள்’ என அனைவரது செல்போன்களுக்கும், எஸ்.எம்.எஸ். வந்தபடியே இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்களும் ரம்மி விளையாட, மக்களை இழுக்கின்றன. பணத்தை இழப்பதால், தற்கொலைகள் நடக்கின்றன. இச்சூதாட்டத்துக்குக் குடும்பங்கள் பலவும் பலியாகி வருகின்றன. காவல்துறையினரையும், ஆன்லைன் ரம்மி விட்டு வைக்கவில்லை. 

 

தமிழ்நாடு சிறப்புக் காவல் (ராஜபாளையம்) 11-ஆம் அணியின் தளவாய், தனது அணியின் அனைத்து நிறும/குழும ஆய்வாளர்களுக்கும், ஆன்லைன் ரம்மி குறித்து எச்சரிக்கும் விதத்தில் சுற்றறிக்கையே அனுப்பியிருக்கிறார். அதில், தங்களது நிறும/குழுமங்களில் பணிபுரியும் அதிகாரிகள்/ஆளிநர்கள் எவரேனும் பணியில் இருக்கும்போது, ஆன்லைன் ரம்மி விளையாடுவதாகத தகவல் தெரிய வந்தால், அவர்கள் குறித்து உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும். 

 

online rummy police circular issued

 

மேலும், காவல் ஆளிநர்கள் எவரும் ஆன்லைன் ரம்மி விளையாடக் கூடாது. தவறும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, அனைத்து நிறும/குழும ஆய்வாளர்களுக்கும், ஆஜர் அணிவகுப்பில் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுரை தெரிந்து கொள்ளப்பட்டதென, காவல் ஆளிநர்களிடம், கீழ்க்கண்ட அட்டவணையின் பிரகாரம், கையெழுத்து பெற்று, முகாம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். என்று  குறிப்பிட்டுள்ளார். 

 

காவலர்களே ஆன்லைன் ரம்மியில் பொழுதைக் கழித்துப் பணத்தை இழக்கிறார்கள் என்றால், சாமானியர்கள் எம்மாத்திரம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

“ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை இல்லை” - உயர்நீதிமன்றம்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

High CourtNo ban on online rummy game

 

கடந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்குத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தத் தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

 

இதையடுத்து, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. இந்தத் தடைச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. 

 

இது தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோத்தகி வாதிட்டார். அதில் அவர், "ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆன்லைனின் ரம்மி விளையாடுவதை திறமைக்கான விளையாட்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன் பிறகும், இந்த விளையாட்டை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கருத முடியாது. எனவே, தமிழ்நாடு கொண்டு வந்த இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (09-11-23) வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு கோரிக்கை வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் செல்லும்.

 

ஆனால், அதே நேரத்தில் திறமைக்கான விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக் கூறி தடை செய்து தமிழக அரசு இயற்றியுள்ள சட்டம் செல்லாது. அதனால், அந்த சட்டப் பிரிவுகளை ரத்து செய்கிறோம். ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்குத் தமிழக அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்” என்று கூறி தீர்ப்பளித்தனர்.