Skip to main content

ஆன்லைன் ஆர்டர்; கூகுள் பே பணப்பறிமாற்றம்; வசமாய் சிக்கிய போதை ஊசி கும்பல்

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

Online ordering; Google Pay Transfer! Drug injection gang trapped by police

 

தேனி மாவட்டத்தில் போதைக்காக பயன்படுத்தக் கூடிய மருந்துகளை பேருந்தில் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். 

 

இதில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமதுமீரான், மாணிக்கம் ஆகிய இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு ஊக்கமருந்தை தவறான வழியில் போதைக்காக ஊசி மூலமாக பயன்படுத்தி வந்ததோடு, அதிக லாபத்துக்காக இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சின்னமனூரைச் சேர்ந்த தங்கேஸ்வரன், காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் மூலம் அறிமுகமான திருச்சியைச் சேர்ந்த ஜோனத்தன்மார்க் என்பவரிடம் இருந்து வாங்கி பேருந்தில் கடத்தி வந்ததாக தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த ஜோனத் தன்மார்க் என்பவரிடம் ஆன்லைன் மூலம் போதை தரக் கூடிய மருந்துகளை கொள்முதல் செய்து அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தி வந்துள்ளார்.

 

அதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜோனத்தன் மார்க்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சியில் ஒரு மருந்து நிறுவனத்தை நடத்தி மதுரையில் ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து க்ரீன் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும், சென்னையில் ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து பிங்க் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும், புனேயில் ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து ஆரஞ்ச் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும் கொள்முதல் செய்து அதனை உறவினர்களுக்கு மருந்துகள் அனுப்புவதாக சொல்லி பேருந்துகளில் அனுப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.  

 

Online ordering; Google Pay Transfer! Drug injection gang trapped by police

 

இவ்வாறு தமிழகத்தில் சென்னை, ஒசூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களான கேரளாவின் பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு உதவியாக புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த வினோதினி என்ற பெண் உதவியாளராக திருச்சியில் பணிபுரிந்து வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இதையடுத்து அவரிடம் போதைக்காக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த வரையறைக்கு உட்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள் ஏராளமானவை கைப்பற்றப்பட்டதோடு ஜோனத்தன் மார்க்கின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜோனத்தன்மார்க், அவரது உதவியாளர் வினோதினி மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முகமதுமீரான், மாணிக்கம், தங்கேஸ்வரன், சரவணக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.