online games tn govt chennai high court

Advertisment

உயர்நீதிமன்ற ஆலோசனைப்படி, ஆன்லைன் விளையாட்டுகளால் நிகழ்ந்த தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கிலேயே, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து,கடந்த ஆண்டு நவம்பர் 21- ஆம் தேதி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன.

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்து தமிழக அரசு சார்பில் உள்துறை துணைச் செயலாளர் உதயபாஸ்கர் தாக்கல் செய்த பதில்மனுவில், ‘தெலுங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதைப் போல, தமிழகத்திலும் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த ஆலோசனையை ஏற்று, இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதாக,10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் சிறார்கள் ஆவர். குழந்தைகள், தங்கள் பெற்றோரின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். அதனால், பெற்றோருக்கு ஏற்படும் பண இழப்பைத் தடுக்கவும், தற்கொலைகளைத் தடுக்கவுமேஇந்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ரம்மி விளையாட்டு திறமைக்கானது என்றாலும், பந்தயம் வைத்து விளையாடினால் அது குற்றமாகும். பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தை வர்த்தகமாகக் கருத முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,அரசுத் தரப்பில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், அதற்கு விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,விசாரணையை பிப்ரவரி 10- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.