
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 6வது பிளாக்கைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, இவரது மகன் தியாகராஜன். இவருக்குத் திருமணமாகி வினோதினி என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் தியாகராஜன், சென்னை ஓட்டேரியில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வந்தார். தியாகராஜன் ஆன்லைன் சூதாட்டத்திற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நண்பர்களிடம், மற்றவர்களிடம் கடன் வாங்கிய 6 லட்சம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். இந்தக் கடனைக் கட்டுவதற்காக பெற்றோர்கள் தனது வீட்டை விற்றுக் கடனை கட்டி உள்ளனர். மீண்டும் தியாகராஜன் தனியார் நிதி நிறுவனங்களில் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி மீண்டும் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார்.
இந்தக் கடனுக்காக நிதி நிறுவனங்கள் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 5 லட்ச ரூபாய்க்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு, 13 லட்சம் வரை நிதி நிறுவன முகவர்கள் கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், தியாகராஜன் மட்டும் கொடுங்கையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். நிதி நிறுவன முகவர்கள் இங்கு வந்து கடன் கேட்டு தொல்லை கொடுத்ததால், தியாகராஜன் நேற்று முன்தினம் (02.02.2021) இரவு உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூதாட்டத்திற்கு, கடந்த ஆண்டு நவம்பர் 21 தேதி அன்றே தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இன்றைய சட்டசபை கூட்டத் தொடரின்போது ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதாவை துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.