Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி மலை மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.