
சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக வட மாநிலங்களில் இருந்து மேட்டூர், சங்ககிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக லாரிகள் அதிகம் சென்று வருகின்றன.
இப்பாலத்தின் வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் மும்பையில் இருந்து கோவைக்கு துணி பேரல்கள் ஏற்றி வந்த லாரி பாலத்தின் வளைவில் திரும்பும் பொழுது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியை ஒட்டி இருசக்கர வாகனத்தில் வந்த சிந்தாமணியூரை சேர்ந்த தமிழ்மணி என்பவர் லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் வளைவு பகுதியில் அடிக்கடி ஏற்படும் தொடர் விபத்திற்கு என்னதான் தீர்வு என கேள்வி எழுப்பி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.