Skip to main content

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
kathiramangalam ongc


கதரிமங்கலத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும், மேலும்  கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளிலிருந்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள  குழாய்களில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்துள்ளன. மக்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு இத்தகைய கசிவுகள் கட்டுப்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.
 

காவிரிக் கரையில் அமைந்துள்ள கதிராமங்கலம் மூன்று போகம் விளையும் வளமான பூமியாகும். ஆனால், 2002-ஆம் ஆண்டு கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, விவசாயம் சீரழிந்து வருகிறது.  அதுமட்டுமின்றி, கதிராமங்கலத்திலிருந்து குத்தாலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய்கள் அடிக்கடி அழுத்தம் தாங்க முடியாமல் உடைந்து சிதறுவதும், அவற்றிலிருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் வயல்வெளிகளில் பாய்ந்து பலநூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசப்படுத்துவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டன. இதைத் தடுத்தும் நிறுத்தும்படி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து வருங்காலங்களில் எண்ணெய்க்கசிவு ஏற்படாமல் தடுக்கப்படும் என்று ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இன்று வரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது தான் பெருஞ்சோகம்.
 

கதிராமங்கலத்தில் நேற்று மாலை மதகடி மாயானம் சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் அருகில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள வயல்வெளியில் பாய்ந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.  கச்சா எண்ணெய்க்கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும், இப்போது வரை கச்சா எண்ணெய் குழாய்கள் மாற்றப்படவில்லை. அடும்பாடு பட்டு நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏற்பட்ட இழப்புக்கு அரசுத் தரப்பில் நிவாரணம் அளிக்கப்படுமா? என்பது தெரியவில்லை. எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதியில் சில இடங்களில் கச்சா எண்ணெய் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
 

கதிராமங்கலத்திலிருந்து குத்தாலம் வரை 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள குழாய் பாதைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் அப்பகுதி மக்கள் சந்திக்கும் இழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30&ஆம் தேதி இதேபோன்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாக கச்சா எண்ணெய்க் கிணறுகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கதிராமங்கலம் பகுதி மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி  முதல் தொடர்போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கதிராமங்கலம் மக்களின் போராட்டம் இன்று 345 நாளை எட்டியுள்ள நிலையில், புதிதாக ஏற்பட்ட கசிவால் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
 

கிட்டத்தட்ட ஓராண்டாக போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் அத்துமீறல்களுக்கு பாதுகாவலனாக  செயல்பட்டு வருகிறது. தங்கள் உரிமைகளுக்காக போராடும் கதிராமங்கலம் மக்களை பகையாளிகளாக நினைத்து அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தல், தடியடி நடத்துதல் போன்ற அடக்குமுறைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத மக்கள்விரோத செயலாகும்.
 

அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் மக்கள் வசிக்காத பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்க் குழாய்கள் வெடித்ததால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டது உலகறிந்த வரலாறு ஆகும். இதைக் கருத்தில்கொண்டு வளர்ந்த நாடுகளில்கூட மக்கள் வாழும் பகுதிகளில் கச்சா எண்ணெய்க் குழாய்கள் அமைப்பதைப் பெரும்பாலும் அந்த நாட்டு அரசுகள் தவிர்த்து வருகின்றன. வளர்ந்த நாடுகளிலேயே கச்சா எண்ணெய்க் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க தொழில்நுட்பம் இல்லாத நிலையில், எந்த வசதியும் இல்லாத, கதிராமங்கலம் மற்றும் அதன் பகுதியில் கச்சா எண்ணெய்க் குழாய்கள் புதைக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் பாதுகாப்பானது அல்ல.
 

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், வேளாண் விளைநிலங்கள் சீரழிவைத் தடுக்கவும் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடிவிட்டு, ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.