பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் இருவர் உயிரிழந்த நிலையில், காஞ்சிபுரத்திலும் வடமாநில இளைஞர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதனால் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு நான்கு என இருந்த நிலையில் தற்போது சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் புதிதாக கட்டப்படும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய அவரது கணவர் கேசவ வேல், குழந்தை ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாண்டஸ் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.