Skip to main content

பாய்லர் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலி

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

jlk

 

ஈரோடு அருகே உள்ள வெண்டிபாளையத்தில் தனியார் பால் பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் கடந்த பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது  ராமன் என்ற முதியவர் இரவு நேரக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனம் பாலைக் கொண்டு பால்கோவா உள்ளிட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தயாரித்து வருகிறது.

 

13 ந் தேதி அதிகாலை ராமன் தண்ணீரை சூடாக்கும் பாய்லரை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிக அழுத்தம் காரணமாக எதிர்பாராத விதமாக பாய்லர் மிக பயங்கரமான சத்தத்துடன் குண்டு வெடிப்பது போல் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு ஊழியர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

 

மேலும் இது குறித்து ஈரோடு மற்றும் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாய்லர் வெடித்து முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாய்லர் வெடிப்பில் பலியானவர் உடலை வாங்க மறுப்பு

Published on 14/12/2022 | Edited on 15/12/2022

 

jkl

 

ஈரோடு வெண்டிபாளையம் அருகே தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் சோலார் இ.பி. காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவராவார். இங்கு பால்கோவா, பன்னீர் உள்ளிட்ட பால் பொருள் தயாரிக்கப்படுகிறது. மேலும் பால் விற்பனையும் செய்யப்படுகிறது. இங்கு நான்கு தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். 13 ந் தேதி காலை 6 மணியளவில் மலையம்பாளையத்தை அடுத்த கருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது ராமன்  என்பவர் பாய்லர் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருந்தார். 

 

அப்போது அழுத்தம் தாங்காமல் அந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். பாய்லர் வெடித்ததில் பண்ணை மேற்கூரை ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டது. பொருட்களும் சிதறிக் கிடந்தன. சம்பவ இடத்துக்கு ஈரோடு தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இறந்த ராமன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பால்பொருள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்து ஏற்பட வைத்தல் 287, 304 ஏ ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்த நிலையில் 13ந் தேதி மாலை பிரேதப் பரிசோதனை முடிந்து ராமன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் தனியார் பால் தயாரிக்கும் நிறுவனம் இறந்த ராமன் குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே ராமனின் உடலை வாங்குவோம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர். இதனால் அவரது உடல் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. 14ந் தேதியும் இரண்டாவது நாளாக போலீசார் ராமனின் உறவினரிடம்  தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உரிய இழப்பீடு கொடுக்காமல் உடலை வாங்கமாட்டோம் என உறுதியாகக் கூறிவிட்டனர். இதனால் பாய்லர் வெடிப்பில் பலியான ராமன் உடல் இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனையிலேயே உள்ளது.

 

 

Next Story

என்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Cuddalore NLC

 

கடலூர் என்.எல்.சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் 01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர்  தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.   

 

அவர்களில் நெய்வேலி நகரியம் 7-ஆவது வட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற துணைத் தலைமைப் பொறியாளர் 02.07.2020 அன்றும், இன்ட்கோசெர்வ் தொழிலாளி செல்வராஜ் என்பவரும், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் என்பவர் 05.07.2020 அன்றும், நிரந்தரத் தொழிலாளி வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் ஜோதி ராமலிங்கம், இன்ட்கோசெர்வ் தொழிலாளி தொப்புளிக்குப்பம் இளங்கோவன் ஆகியோர் 06.07.2020 அன்றும், நெய்வேலி நகரியம் வட்டம் 29-ஐ சேர்ந்த இன்ட்கோசர்வ் தொழிலாளி ஆனந்தபத்பநாபன் 07.07.2020 அன்றும், முதுநிலை தொழில்நுட்பப் பணியாளர் சுரேஷ் என்பவர் 12.07.2020 அன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

 

இந்நிலையில் மேலும் 5-ஆவது அலகில் பணிபுரிந்து வந்த இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார். 

 

அதையடுத்து என்.எல்.சி கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

 

அதேசமயம் 23 பேர் பாதிக்கப்பட்டதில் 6 பேர் சம்பவ இடத்திலும், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 17 பேரில் 9 பேர் சிகிச்சை பலனின்றி மருதுவமனையிலும் உயிரிழந்த நிலையில் 8 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.