
தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது. சில இடங்களில் கனமழை நீடித்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ரயில்வே பாலத்திற்கு கீழே சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழை நீரில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று சிவகங்கையியின் காரைக்குடியில் வரலாறு காணாத அளவிற்கு 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது. இன்று காலையும் சிவகங்கையில் பல இடங்களில் மழை பொழிந்தது. காரைக்குடி ரயில்வே நிலையத்திற்கு அருகே வாகனங்கள் செல்வதற்கான ரயில்வே சுரங்கப் பாதையை ஒன்று இருந்தது. சுரங்கப் பாதை பகுதியில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக நீர் தேங்கியது. மொத்தம் 12 அடி நீளம் உள்ள சுரங்கப் பாதையில் நேற்று இரவு ஒருவர் நடந்து சென்று கடக்க முயன்றதாகவும், போனவர் திரும்பி வரவில்லை என்றும் தகவல் பரவி இருந்தது.
இந்நிலையில் காவல் துறையினரும் தீயணைப்பு மீட்புப் படையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் அதேபகுதியைச் சேர்ந்த பீட்டர் என்ற பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.