சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் பல நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்க கம்பிகள் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த பள்ளங்களில் இரவு நேரங்களில் கவனக்குறைவாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்த சேதுராமன் (44) இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று இரவு உயிரிழந்தவரை இன்று போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில் நெடுஞ்சாலை பணியாளர்கள் தேவையான அறிவிப்புகள் மற்றும் விளக்குகளை வைக்காததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.