திருவாரூர் அருகே பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு இல்லாததால் குடும்பத்துடன் பைக்கில் வந்த அரசு ஊழியர் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. ஒப்பந்த நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் நன்னிலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி. மகள் ஓவியலட்சுமி. இவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி. இந்த நிலையில் குமார் பனங்குடியில் இருந்து திருவாரூருக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக மனைவி மற்றும் மகளுடன் சென்றுவிட்டு திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது, விசலூர் என்கிற இடத்தில் நெடுஞ்சாலையில் பால பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பைக்குடன் தடுமாறி விழுந்துள்ளார். இதில் பால கட்டுமான பணிக்காக நீட்டி விடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளில் குமார் விழுந்ததில் அவரது வயிறு மற்றும் தொடைப் பகுதியில் இரும்புக் கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குமாரோடு பைக்கில் வந்த அவரது மகள் மற்றும் மனைவி தேன்மொழிக்கு முகம் கை காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாகப் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பாலம் வேலை நடைபெறும் இடத்தில் எந்தவித அறிவிப்புப் பலகையோ, தடுப்புகளோ வைத்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை. அதேபோல மின் விளக்கும் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்கிறார்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்.
இந்த நிலையில் பாலம் கட்டுமான நிறுவனம் இயக்குநர் விஜயகுமார், மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், மேலாளர் ரவிக்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் இறப்புக்கு காரணமானவர்கள் என நன்னிலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சூப்பர்வைசர் மற்றும் மேலாளர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தற்பொழுது பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு டேக் டைவர்ஷன் போர்டு வைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. அதோடு அந்த இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு அவர்களுடன் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களோ, இந்த விபத்து நடப்பதற்கு முன்பாகவே இதே போன்று ஒப்பந்தக்கார நிறுவனமும் காவல்துறையினரும் முறையாக அந்த பகுதியில் டேக் டைவர்ஷன் போர்டு வைத்திருந்தால் இந்த விபத்து நடக்காமல் இருந்திருக்கும். ஒரு உயிர் போனதற்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் சரி செய்வது வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.