Skip to main content

சிற்ப கலைஞர் கத்தியால் குத்தி கொலை; மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்! 

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

One passed away near salem police arrested one

 

நாமக்கல் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கோயில் சிற்ப கலைஞரை நண்பரே கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (24). சிற்பக் கலைஞர். இவர், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓலப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சிற்ப வேலைகள் செய்து வந்தார். இவருடன், ஒரே ஊரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களான சீனிவாசன் (33) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரும் வேலை செய்து வந்தனர். 


இவர்கள் அனைவரும் கோயில் அருகிலேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில், ஜூன் 2ம் தேதி, செந்தில்குமாருக்கு பிறந்த நாள் என்பதால், உடன் வேலை செய்து வந்த சிற்ப கலைஞர்கள் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடினர். செந்தில்குமார், அனைவருக்கும் மது விருந்து கொடுத்துள்ளார். உடன் வேலை செய்து வந்த சிற்ப கலைஞர்கள் எல்லோரும் மதுபோதை தலைக்கேறிய நிலையில், அவரவர் அறைகளுக்குச் சென்று விட்டனர். அதன்பிறகு, செந்தில்குமாரும் சீனிவாசனும் மட்டும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில், இருவரும் ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். 


ஒரு கட்டத்தில் அவர்களிடையே கைகலப்பு மூண்டது. ஆத்திரம் அடைந்த சீனிவாசன், அருகில் கிடந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகராறு நடக்கும் சத்தம் கேட்டு உடன், வேலை செய்து வரும் மற்ற சிற்பக் கலைஞர்கள் அங்கு ஓடிவருவதற்குள் சீனிவாசன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த செந்தில்குமாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 


இதுகுறித்து அவர்கள் வெண்ணந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.