
தேவையில்லாத நபர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்ததற்காக, ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் மனுவைத் தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் எச்சரித்ததால், மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில் சொத்துகள், நீர்நிலைகளை அளவிடச் சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கும்படி சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் உள்துறை, வருவாய்த் துறை, பொதுத்துறை, வீட்டுவசதித் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவற்றைச் சார்ந்த 44 பேரை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல்குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேவையில்லாமல் இத்தனை நபர்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்ததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர்.
பின்னர் மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வாபஸ் பெற அனுமதித்து மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.