Skip to main content

ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

One of the helicopter brothers admitted to hospital!

 

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் என்கிற பெயரில் பல கோடி மோசடி செய்து தலைமறைவான பாஜக பிரமுகர்கள் கணேஷ் மற்றும் சுவாமிநாதனை போலீஸார் கடந்த 6ஆம் தேதி கைது செய்தனர். 

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் தீட்சதர் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் விக்டரி என்கிற பெயரில் நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு மாடுகளைக் கொண்டு மூன்று இடங்களில் பால் பண்ணை, ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுவது எனப் பல தொழில்களை செய்துவந்தனர். சகோதரர்கள் எப்போதும் ஒன்றாகவே ஹெலிகாப்டரில் வலம்வந்ததால், இவர்களை ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்ற பெயரிலேயே பலரும் அழைத்தனர்.

 

One of the helicopter brothers admitted to hospital!

 

இவர்களது நிதி நிறுவனத்தில், ஒன்று கொடுத்தால் மூன்று என்பது போல கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து, பலதரப்பட்ட மக்கள் கோடிக்கணக்கில் முதலீடாக கொடுத்த பணத்தை ஏமாற்றியதாகப் புகார்கள் எழுந்த நிலையில், பாதுகாப்புக்காக பாஜகவில் ஐக்கியமாகி பல கூட்டங்களில் கலந்துகொண்டதோடு, வேல் யாத்திரை வந்த அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு உபசரிப்பு செய்து அவருக்கு லட்சக்கணக்கான நிதியும் கொடுத்ததாக அப்போது பாஜகவில் பேசப்பட்டது. அதேபோல் கருப்பு முருகானந்தம், எச். ராஜா உள்ளிட்டவர்களும், இந்தச் சகோதரர்களோடு நெருக்கமாக இருந்தனர் என்ற தகவலும் வெளியாகின. புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த இரண்டு சகோதரர்களையும் கடந்த 06.08.2021 அன்று போலீசார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மற்றொரு ஹெலிகாப்டர் சகோதரரான கணேசனும்  உடல்நலக்குறைவால் சுவாமிநாதன் சிகிச்சை பெற்றுவரும் அதே புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள கணேசனுக்கும் கரோனா தொற்று இருக்குமோ என மருத்துவர்கள் பரிசோதனை செய்துவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.