Skip to main content

ஊரைக் காக்க ஒருநாள் விரதம்; வினோதம் தரும் 'கொப்பித் திருவிழா'

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு நீண்ட நெடிய காலம் தொட்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முன்னோர்களின் கலாச்சார நிகழ்வுகளை இன்றைய தலைமுறையும் தொன்றுதொட்டு தொடர்ந்து வருவதுதான் சிறப்பு. அப்படியான ஒரு நிகழ்வுதான் நோயிலிருந்து ஊரைக் காக்க பெண் குழந்தைகள் நடத்தும் விநோத திருவிழா.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் தான் ஊரைக் காக்க பெண் குழந்தைகள் பங்கேற்று நடத்தும் வித்தியாசமான திருவிழா காலங்காலமாக நடந்து வருகிறது. செரியலூர் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை தனது பெரியப்பா வீட்டிற்கு காட்டுப் வழியாக சென்று காணாமல் போய் பல நாட்களுக்குப் பிறகு கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான பாலை மரத்திலிருந்து அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விழுந்ததாக நம்புகின்றனர் கிராம மக்கள்.

 

சிறுமி கொப்பியம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அதன் பிறகு ஊரில் யாரும் அம்மை போன்ற கொடிய நோயால் பலியாகக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் பெண் குழந்தைகள் (பருவம் எய்தாத பெண் குழந்தைகள்) நோய் நொடியிலிருந்து ஊரை காக்க பொங்கல் நாளுக்கு மறுநாள் விரதம் இருந்து வீட்டில் வெண்பொங்கல் வைத்து, கன்று ஈனாத பசுங்கன்று சாணத்தில் ஒரு பெரிய பிள்ளையாரும், 92 சாணக் கொளுக்கட்டைகளும் பிடித்து அதில் கிருமிநாசினிகளான கூழைப்பூ, ஆவாரம்பூ, அருகம்புல், வேப்பிலை மற்றும் கரும்பு, வெல்லம் வைத்து 3 படையலிட்டு இரண்டு படையல்களை இதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஓலை கூடையில் வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடிக்கு கொண்டு செல்கின்றனர்.

 

குழந்தைகள் கொண்டு வரும் படையல் கூடைகளை பாலை மரத்தடியில் வைத்து குழந்தைகள், பெண்கள் கும்மியடித்து வழிபட்டு ஊர்வலமாக தீர்த்தான் ஊரணிக்கரைக்குச் சென்று அங்கு ஓலைக்கூடையில் குழந்தைகள் கொண்டு வந்த பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இந்த விழாவில் சிறிய பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் அம்மா மற்றும் சகோதரிகள் ஓலைக்கூடைகளைத் தூக்கிச் செல்கின்றனர். வழிபாடுகள் முடிந்த பிறகே விரதம் முடிக்கின்றனர்.

 

பல நூறு ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் தொடங்கிய இந்த கலாச்சார நிகழ்ச்சி இன்றைக்கு மட்டுமல்ல இனியும் இந்த கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கின்ற, கிராம மக்கள் வெளியூர்களில் இருக்கும் செரியலூர்காரர்கள் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்து கலந்து கொள்வார்கள் என்கின்றனர்.

 

இப்படி செய்வதால் எங்கள் கிராமத்தில் அம்மையால் யாரும் இறப்பதில்லை. அதனால் முன்னோர்களின் வழிகாட்டல்படி தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தின் நம்பிக்கை இது என்றவர்கள் எங்கள் ஊரைக் காக்க ஒரு நாள் விரதம் இருப்பதை பெருமையாக நினைக்கிறோம் என்றனர் பெண் குழந்தைகள்.

 

'கொப்பி கொட்டல்' என்பதே குறிப்பிட்ட திருவிழா நடக்கும் இடத்தின் பெயராக உள்ளது. கொப்பி கொட்டல் என்பது 'கும்மியடித்தல்' என்பது பொருள். கிராமங்களில் தை திருநாளை வரவேற்க கிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்கும் நிகழ்வாகத்தான் பெண் குழந்தைகளுக்கு கும்மியடிப்பதை கற்றுக் கொடுக்கும் நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.

 

இதேநாளில் மற்றொரு பக்கம் இளைஞர்கள் போர்காய் தேங்காய் போட்டிகளை நடத்தி பலரையும் மகிழ்வித்து வருகின்றனர். செரியலூர்  கிராம விளையாட்டு திடலில் போர்காய் தேங்காய் விளையாட்டில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தேங்காய்களை நேருக்கு நேர் மோதவைத்து பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் மோதி உடைக்கும் நிகழ்வுகளும் நடக்கும். சுமார் 500 க்கும் மேற்பட்ட தேங்காய்களுடன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் செல்வார்கள். இதற்காக ஒரு தேங்காய் ரூ.500 விலை கொடுத்து வாங்குவதும் உண்டு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.