Skip to main content

"வருடத்துக்கு ஒன்றரை லட்சம் அரசு வேலை உருவாக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

"One and a half lakh government jobs should be created every year" - Ramadoss urged the Tamil Nadu government

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வருடத்துக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலையை உருவாக்கித் தர வேண்டும் என்று திமுக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள  வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. நான்காம் தொகுதி தேர்வுகள் தவிர்த்து, ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்படவுள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல.

 

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி அடுத்த ஆண்டில் மொத்தம் 11 போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. இவற்றில் 8 போட்டித் தேர்வுகள் 2023-ஆம் ஆண்டிலும், 3 போட்டித் தேர்வுகள் 2024-ஆம் ஆண்டிலும் நடத்தப்படும். 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கும் நான்காம் தொகுதி தேர்வுகளின் மூலம் எத்தனை பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. அடுத்த ஆண்டு நவம்பரில் தான் அந்த விவரம் வெளியாகக்கூடும்.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான கல்வித் தகுதிகள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய கல்வித்தகுதியை பெற்று கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம். இவர்களில் 18 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகம். பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சம் ஆகும். அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி 67.61 லட்சம் என தமிழக அரசே தெரிவித்திருக்கிறது.

 

அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட, 68 ஆயிரம் பேருக்கு அரசு பணிகள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டில் 8,000 பேருக்கு கூட வேலை வழங்க வாய்ப்பில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தது 60,000 பேராவது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் ஓரளவாவது நியாயமாக இருக்கும்.

 

ஆனால், அடுத்த ஆண்டில் 10 போட்டித் தேர்வுகள் மூலம் 1754 பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை கிடைக்கும். தொகுதி நான்கு தேர்வின் மூலம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தமாக 7 ஆயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கிடைக்காது. 2022-ஆம் ஆண்டில் 30 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டில் அதில் மூன்றில் ஒரு பங்கு அளவில் 11 போட்டித் தேர்வுகளை மட்டுமே அறிவிப்பது நியாயமல்ல.

 

மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான தொகுதி 1 தேர்வுகள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தொகுதி 2 மற்றும் 2ஏ தேர்வுகள், கூட்டுறவுத் துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தொகுதி 3ஏ தேர்வுகள் ஆகியவை அடுத்த ஆண்டு நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இ.ஆ.ப., இ.கா.ப உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படும் நிலையில், தமிழகத்திலும் அதேபோல் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் முதல் தொகுதி தேர்வு நடத்தப்படுகிறது. 2023-ஆம் ஆண்டில் முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாததால் தகுதியும், திறமையும் உள்ள பலர்  வயது வரம்பைக் கடந்து அரசு பணியில் சேரும் வாய்ப்பை இழக்கின்றனர்.

 

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக ஏற்படும் 20 ஆயிரம் காலியிடங்களையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் 10 விழுக்காட்டினரைக் கூட தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வராதது தமிழ்நாட்டு பட்டதாரி இளைஞர்களின் அரசுப் பணி கனவை கலைக்கும் செயலாகும்.

 

தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அவர்களது திறமைகள் அடிப்படையில் வேலை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.