Omni Buses will ply from Coimbatore Bus Owners Association Notification

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் ஜனவரி 24-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்றுபோக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், “1000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை ஒரே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்த போதிய இட வசதி இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை.

Advertisment

Omni Buses will ply from Coimbatore Bus Owners Association Notification

இந்த பணிகள் முழுமையாக முடிந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு சார்பில் வசதிகளை ஏற்படுத்தி தந்தால் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கதிற்கு மாற்றுவோம். எனவே அதுவரை கோயம்பேட்டில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் நிலையம் வரும் வரை இதே நிலை இருக்கும். மேலும் ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது”எனவும் தெரிவித்தனர்.