
கரூர் மாவட்டம் செம்மடை நாவல் நகர் அருகே சேலத்திலிருந்து கரூர் நோக்கி ஆம்னி பேருந்து இன்று (17.05.2025) சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியுள்ளது. அதே சமயம் தொடர்ந்து சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த சுற்றுலா வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இது குறித்துத் தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி சுற்றுலா வாகனத்தில் இருந்த சிறுமி, சிறுவன் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவில் செல்லவிருந்த பேருந்து என்பது தெரியவந்துள்ளது.
அதோடு விபத்தில் சிக்கிய சுற்றுலா வாகனம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. கரூரில் ஆம்னி பேருந்து சுற்றுலா வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 4 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.