
திருச்சியில் பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பேருந்து திடீரென விபத்துக்குள்ளாகி பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்து திருச்சி மன்னார்புரம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. பேருந்து தீப்பற்றி எரிந்தது அறிந்து உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இருப்பினும் நடுசாலையில் பேருந்து முழுவதும் பற்றி எரிந்து தீக்கிரையான இந்த காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.