ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. அங்கு பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, மத்திய அரசு பல கட்டுப்பாடுகள் விதித்தது. அதுமட்டும் இல்லாமல் நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்தது.
இந்நிலையில் ஆறு மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இதற்கிடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "உமர் அப்துல்லாவின் இந்தப் படத்தைப் பார்த்த போது ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது. உரிய நடைமுறையோ, விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பல காஷ்மீர் தலைவர்கள் பற்றியும் இதே கவலை ஏற்படுகிறது. காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிப்பதுடன், அங்கு மீண்டும் இயல்புநிலை திரும்பச் செய்ய வேண்டும்" ட்வீட் செய்துள்ளார்.