ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் தமிழக இளைஞர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடெமி அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா மூன்று கோடி செலவில் விளையாட்டு அரங்கம் நிறுவப்படும். இதன் மூலம் ஏழை எளிய, நடுத்தர கிராம, நகர இளைஞர்கள் பயன்பெறுவார்கள். ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் தமிழக இளைஞர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த ஒலிம்பிக் தங்கம் தேடுதல் என்ற திட்டத்தை 25 கோடியில் தொடங்க இருக்கிறோம். வடசென்னை பகுதி பல்வேறு விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் புகழ்பெற்று விளங்குகிறது. அப்பகுதி இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன குத்துச்சண்டை வளாகம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.