Skip to main content

13 பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த சொந்தக்காரன்!

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

old women incident police investigation in tharamangalam

 

தாரமங்கலம் அருகே, நகைகளுக்காக மூதாட்டியை மின்சார வயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 78). இவருக்கு 2 மகன், 4 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி, குடும்பத்துடன் வசிக்கின்றனர். 

 

கடந்த ஜூலை 30- ஆம் தேதி இரவு சின்னம்மாள், அதே பகுதியில் உள்ள அவருடைய தோட்டத்தின் மோட்டார் அறையில் மின்சார வயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட 13 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. 

 

மர்ம நபர்கள் மூதாட்டியைக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் தொல்காப்பியன் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 

சம்பவத்தன்று, மூதாட்டி சின்னம்மாள் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவரை, உறவினர் மகன் சுப்ரமணி (வயது 37) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, அவருடைய தோட்டத்தில் இறக்கி விட்டிருப்பது தெரிய வந்தது. அதனால் சுப்ரமணி மீது சந்தேகம் வலுத்தது.

 

சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்த போது, நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை மின் வயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து, மோட்டார் அறையில் போட்டுவிட்டு நகைகளுடன் தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்தது. 

 

இதையடுத்து சுப்ரமணியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அவரைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.