ஆவடியில் மூதாட்டியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆவடி பொதிகை நகரில் உள்ள பவாணி அம்மன் தெருவில் வசித்து வந்த சாவித்திரி தனது வீட்டில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு தலையில் காயத்துடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் செல்போன் சிக்னலை வைத்து கொலையாளி முனுசாமியை கண்டுபிடித்தனர். அதன்பின் முனுசாமியிடம் விசாரித்ததில் சாவித்திரியிடம் வட்டி வசூல் செய்து கொடுத்ததற்கான கமிஷன் பணம் கேட்டும் தராததால் ஆத்திரத்தில் முனுசாமி அவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்றது தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் முதன் முதலில் விசாரிக்க சென்ற போது முனுசாமி மக்களோடு மக்களாக இருந்து விசாரணையை வேடிக்கை பார்த்ததை தெரிந்து கொண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.