The old woman was taken away ; Youth caught by CCTV

Advertisment

மதுரையில் கோவில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியிடம் நகை பணம் பறிப்பதற்காக இளைஞர் ஒருவர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாறையில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை அழகர் கோவில் மலைப்பாதையில் பூங்கா ஒன்று உள்ளது. அதன் அருகே மூதாட்டி ஒருவர் பாறை இடுக்கு பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அந்தப் பகுதியைச் சுற்றி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு சிசிடிவி காட்சியில் மூதாட்டியுடன்இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இதை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தலைமறைவாக இருந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்ற அந்த இளைஞரை கிடாரிப்பட்டியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ஐந்து சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பணம், நகையைப் பறித்துக் கொண்டு கொலை செய்தது தெரியவந்தது.