Skip to main content

பென்ஷன் தொகைக்காக மூதாட்டி கொலை... முறையற்ற தொடர்பில் இருந்த முதியவர் வெறிச்செயல்

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

old man who was in improper relationship incident

                                                                      கோப்புப்படம் 
 

கடலூர் மாவட்டம் நல்லூர் மணிமுத்தாற்றங்கரையில் வில்வனேஸ்வரர் கோவில் என்ற பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் மணிமுத்தாறு, கோமுகியாறு ஆகிய இரண்டு ஆறுகளும் இணைகிறது. அப்பகுதியில் கடந்த 18 ஆம் தேதி ஒரு மூதாட்டியின் சடலம் ஒன்று முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தை பார்த்துவிட்டு வேப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் யார்? அவர் எப்படி இங்கு வந்தார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலையா கொலையா? என இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ராஜேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர்.

 

திட்டக்குடி புது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமேகலை. இவர் பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள அகரம் சீகூர்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக வேலைசெய்து வந்துள்ளார். அந்த மையத்தில் சமையல் உதவியாளராக வேலை செய்து வந்தவர் 65 வயது நல்லம்மாள். இவர் பணியில் இருந்த காலத்தில் ராஜேந்திரன் வீட்டிற்கு அடிக்கடி வந்து வீட்டு வேலை செய்துள்ளார். அப்போது நல்லம்மாள் ராஜேந்திரன் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது முறையற்ற தொடர்பாக மாறியது. இந்நிலையில் ராஜேந்திரன் மனைவி உடல்நிலை சரியில்லாமல் வெளியூரில் வசித்து வந்துள்ளார். ஒருபக்கம் ராஜேந்திரனுக்கு கடன் சுமை அதிகரித்து இருந்தது.

 

நல்லம்மாளுடன் வைத்துள்ள உறவின் அடிப்படையில் அவர் ஓய்வுபெற்ற பிறகு கிடைத்த பென்ஷன் பணம், நகைகளை தான் கடனை அடைப்பதற்காக கேட்டுள்ளார் ராஜேந்திரன். ஆனால் நல்லம்மாள் தர மறுத்துள்ளார். இதனால் நல்லம்மாள் மீது கோபத்தில் இருந்த ராஜேந்திரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில் நல்லம்மாள் தனக்கு மனநிலை சரியில்லை எனவே நல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட வேண்டும் என்று ராஜேந்திரனிடம் கூறியுள்ளார். அவரிடம் அன்பாக பேசிய ராஜேந்திரன் அவரை நல்லூர் சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். நல்லம்மாளைக் கொலை செய்ய நேரம் பார்த்திருந்த ராஜேந்திரன் அருகில் உள்ள மணிமுத்தாற்றங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.

 

தாக்குதலில் நல்லம்மாள் சுயநினைவை இழந்து கீழே விழுந்ததும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயின், காது கம்மல் ஆகியவற்றை கழட்டி எடுத்துக்கொண்டு அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து நல்லம்மாள் முகத்தில் போட்டு அவரை கொலை செய்துவிட்டு ராஜேந்திரன் தப்பி சென்று விட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் ராஜேந்திரனை தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குபதிவு செய்த வேப்பூர் போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்த கொலை வழக்கில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் செம்புலிங்கம் சந்திரா மற்றும் தனிப்பிரிவு போலீசார் விரைந்து கொலையாளியைக் கைது செய்துள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் பாராட்டியுள்ளார். நல்லூர் மணிமுத்தாற்றங்கரை  பகுதியில் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.