தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்.6 மற்றும் அக்.9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.இதில், நேற்று (9ஆம் தேதி) நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென் குச்சிபாளையம் ஊராட்சியில் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
நேற்று பிற்பகல் அதே கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கலியபெருமாள்(70), என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் செலுத்தவேண்டிய வாக்கைச் செலுத்துவதற்காக அங்கிருந்த வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார். அங்கு தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு பின்னர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்ற சில நிமிடங்களில் அவர் உயிரிழந்துள்ளார். இதனால் கிராம மக்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினர். உயிர் இழக்கும் கடைசி நேரத்திலும் கூட தனது வாக்கை அளித்துவிட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் அந்தக் கிராம மக்களிடம் பெரும் வேதனையைத் தந்துள்ளது. இருந்தும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.