திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதனால் வரிசையில் நின்றுகொண்டிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அறிந்த கோவில் நிர்வாகிகள், உடனடியாக அங்குச் சென்று பார்த்தனர். அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த ராஜா(60) என்ற முதியவர் அந்த பாம்பை அமுக்கி பிடித்து கோவிலுக்கு வெளியே கொண்டு சென்றார்.
ஆனால், அதற்குள் அந்தப் பாம்பு முதியவர் ராஜாவை கடித்தது. அதேசமயம், அங்கு தீயணைப்புத் துறையினர் வந்தனர். அப்போது அவர்களிடம் பாம்பை ஒப்படைத்த ராஜா திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக் கண்டு பதட்டமடைந்த அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த சமயபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.