
கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய எல்லையில் உள்ள தே.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(60). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கனகராஜ், தனச்செல்வி தம்பதியினர். இந்நிலையில், தாமரைச்செல்வன் வீட்டு தண்ணீர் தொட்டி நிரம்பி வழிவது சம்பந்தமாக இவர்கள் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு, அது முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 14.3.2020 அன்று இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கனகராஜ் அவரது மனைவி தனச்செல்வி இருவரும் தாமரைச்செல்வனை அறுவெறுக்கத்தக்க கடுமையான சொற்களை உபயோகப்படுத்தி திட்டியும், தாக்கியும் உள்ளனர். இதில் தாமரைச்செல்வன் உயிரிழந்தார். இது சம்பந்தமாக கருவேப்பிலங்குறிச்சி போலீசார், கனகராஜ் தனச்செல்வி இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தவழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நீதிபதி பிரபா சந்திரன், நேற்று தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் கனகராஜ் அவரது மனைவி தனச்செல்வி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.