ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், கள்ளியம்புதூரை சேர்ந்தவர் புஷ்பா(58). இவரது தந்தை பழனிசாமி (90). கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் புஷ்பாவின் கணவர் இறந்துவிட்டார். புஷ்பா அங்குள்ள தறிப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். புஷ்பாவுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், புஷ்பாவின் தந்தை பழனிசாமியும் வயது முதிர்வு காரணமாக கடந்த சில வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்த சூழலில் மகளிடம் கோபித்து கொண்டு பழனிசாமி, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூங்கில் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் சென்று படுத்துக்கொண்டு அங்கேயே தங்கி இருந்திருக்கிறார்.
பலமுறை புஷ்பா அழைத்தும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவருக்கு விஜய மங்கலம் பகுதியில் சமூகப் பணிகள் செய்து வரும் சுந்தரமூர்த்தி என்பவர் தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் உணவு வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில் பழனிசாமி, சுந்தரமூர்த்தியிடம் பீடி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் முடியாது என சொல்லிவிட்டுச் சென்றுவிட்டதாக தெரிகிறது. அது குறித்து சுந்தரமூர்த்தி, புஷ்பாவிடமும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாலை சுமார் 5.30 மணி அளவில் பஸ் நிறுத்தத்தில் படுத்து இருந்த பழனிசாமி யாரிடமோ பீடி வாங்கி தீப்பெட்டியைப் பற்ற வைத்து பீடி குடித்துள்ளார். அப்போது பீடி நெருப்பு, அவர் படுத்திருந்த நைலான் பாயில் விழுந்து தீப்பிடித்து, அவரது உடலிலும் தீப்பற்றி எரிந்து உள்ளது . பின்னர் பழனிசாமி சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். து குறித்து அவரது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பழனிசாமி உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.