சங்ககிரி அருகே, 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் பூங்காவனம் (50). கூலித்தொழிலாளி. கடந்த ஏப். 26ம் தேதி, இவருடைய வீடு அருகே வசிக்கும் 12 வயது சிறுமியிடம், பூனைக்குட்டி பிடித்து தருவதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.அதை நம்பி ஆசையுடன் சென்ற சிறுமியை பூங்காவனம், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி வீட்டுக்கு ஓடிவந்து தன் தாயிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சங்ககிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் பூங்காவனம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பூங்காவனத்தைக் கைது செய்தனர்.