விழுப்புரத்தில் 100 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக போராடி மீட்டனர்.
விழுப்புரத்தில் உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்கின்ற மூதாட்டி வயல் பகுதிக்கு துணி துவைப்பதற்காக சென்றபோது 100 அடி ஆழம் கொண்ட ஒரு விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
கிணற்றில் ஓரளவு தண்ணீர் இருந்ததால் பெரிய அளவில் மூதாட்டிக்கு காயம் ஏற்படவில்லை. அதேவேளையில் கிணற்றில் வைக்கப்பட்டிருந்த பம்ப்செட் குழாயை பிடித்துக்கொண்டு காப்பாற்றும்படி சத்தம் எழுப்பியுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். மேலும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மூதாட்டியை பத்திரமாக போராடி மீட்டனர்.