Skip to main content

பழைய கருப்பு - வெள்ளை டி.வி... வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகள்... 

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

tv

 

 

சுமார் 1985-86 ஆம் ஆண்டுகளில் மிகவும் வசதி படைத்தவர்கள் கருப்பு - வெள்ளை டெலிவிஷன் பெட்டிகளை வாங்கி தங்கள் வீடுகளில் வைத்தனர். அதன் மூலம் மத்திய அரசின் தூர்தர்ஷன் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு ஏழு முப்பது மணிக்கு ‘ஒளியும் ஒலியும்’ என்ற பெயரில் திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரே ஒரு திரைப்படம் வெளியிடப்படும். 

 

இதைப் பார்ப்பதற்காக கிராம மக்கள் டிவி வைத்துள்ள வீடுகளை மொய்ப்பார்கள். சிலர் பொதுமக்களிடம் 50 பைசா ஒரு ரூபாய் கட்டணம் கூட வசூலித்து அந்த நிகழ்ச்சிகளை காண அனுமதித்தனர். 

 

இப்படி சினிமா திரையில் ஓடிய பாடல்கள், படங்கள் வீடுகளுக்குள் சின்னத்திரையில் ஓட ஆரம்பித்தன. காலமாற்றத்தின் வேக ஓட்டத்தில் கருப்பு - வெள்ளை டிவி மாறி கலர் டிவி பிறகு எல்இடி அடுத்து எல்சிடி என்று விதவிதமான டிவிகள் பிறகு வீடுகளில் மினி தியேட்டர்கள் என்று அதிவேக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. 

 

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கருப்பு-வெள்ளை டிவிகள் குறித்து ஒரு பெரும் வதந்தி பரவி வருகிறது. 1984- 85 காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கருப்பு வெள்ளை டிவிகளில் ஒருவித பாதரசம் உள்ளது. அந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் தயாரித்த கருப்பு வெள்ளை டிவிகள் பெட்டிகள் யாராவது வைத்திருந்தால் அதற்கு முப்பது லட்சம் விலை கொடுத்து வாங்கி கொள்வதாக கூறி பழைய கருப்பு வெள்ளை டிவி புகைப்படங்களை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி அது வைரலாக பரவி வருகின்றன.

 

இப்படிப்பட்ட வதந்திகளை நம்பி தேடி சிலர் அலைந்து திரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கருப்பு வெள்ளை டிவி பெட்டிகள் எங்காவது இருந்தால் அதை திருடி செல்வதற்கும் கும்பல்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோபுர கலசத்தின் உள்ளே இரிடியம் உள்ளது. அது பல கோடிக்கணக்கில் விலை போகும் என்று அதை திருட ஆரம்பித்தனர். பிறகு மண்ணுளிப் பாம்புகளுக்குள் இருடியம் உள்ளதாக கூறி காடுமேடெல்லாம் பாம்பு பிடிக்க தேடி அலைந்தனர். தற்போது கருப்பு-வெள்ளை டிவிக்களை தேடி அலைய போகிறார்கள். சீசனுக்கு தகுந்தாற்போல் வதந்திகளும் வலம் வந்தபடியே உள்ளன. ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள். பொது மக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

போதைப்பொருள் விற்பனை; கடலூரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

pondicherry police filed case for four cuddalore youngsters 

 

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த கடலூரை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா, எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் ஆகியோரின்உத்தரவின் பேரில் உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபுஜி, குற்றப்பிரிவு காவலர்கள் சத்தியவேலு, பிரேம்குமார், செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று (23.03.2023) காலை 07.30 மணியளவில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சோதனை செய்தபோது, கிழக்கு பக்கமாக அமைந்துள்ள கழிப்பறை அருகில் பொதுமக்களுக்கும், கஞ்சா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த கடலூர் திருப்பாப்புலியூரை சேர்ந்த குப்புசாமி மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் (வயது 23), ராமலிங்கம் என்பவரது மகன் மேகி என்கிற மகேஷ் (வயது 21), வன்னியர்பாளையம் சிவசுப்பிரமணியம் மகன் ரேவந்த் (வயது 25), மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி மகன் ஆதித்தியன் (வயது 26) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1400 கிராம் கஞ்சா அடங்கிய 140 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் சாமலகோட்டையை சேர்ந்த திருப்பதி என்பவரிடம் கஞ்சா இலைகளை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற நடுவர் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.