Skip to main content

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Officials who removed encroachments; Arguing shop owners

 

ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் கோவை, திருப்பூர், மதுரை, தேனி, ராமேஸ்வரம், சேலம், ஈரோடு, திருச்சி, சத்தியமங்கலம், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் கோபி பஸ் நிலையம் வந்து செல்கின்றன. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேருந்தில் செல்வதால் கோபி பேருந்து நிலையம் காலை முதல் இரவு வரை பயணிகள் நிறைந்து பரபரப்பாகவே இருக்கும்.

 

இதனால் நகராட்சி சார்பில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட வெளியே கடைகளை வைத்தும், பயணிகள் அமர்வதற்கும் நிற்பதற்கும் இடமில்லாத வகையில் பொருட்களை வைத்து நடைபாதையை ஆக்கிரமித்து இருந்தனர்.

 

இதுகுறித்து பயணிகள் நகராட்சி அலுவலகத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சசிகலா உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள், பஸ் நிலையத்தில் 15 கடை உரிமையாளர்களிடம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அப்போது கடை உரிமையாளர்கள், நகராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்றப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.