Skip to main content

அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வி - நெடுவாசல் கிராம மக்கள் வெற்றி

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
nedu


    நெடுவாசல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்களின் கோரிக்கையையடுத்து கடை மூடப்பட்டது. மீண்டும் கடையை திறக்க டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கடைவீதியில் இருந்த டாஸ்மாக் கடை ஒதுக்குபுறமாக வயல் பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஹைட்ரோ கார்ப்பன் போராட்டத்திற்கு டாஸ்மாக் கடையால் தொய்வு ஏற்படுகிறது என்று குற்றம்சாட்டி வந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த மே தின கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல மே 25 ந் தேதி நடந்த கிராம கூட்டத்திலும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதுடன் கிராம மக்கள் திரண்டு டாஸ்மாக் கடைக்கு ஊர்வலமாக சென்று கடையை மூட கோரிக்கை விடுத்தனர். 
    அதன் பிறகு கிராமத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர், ஆலங்குடி வட்டாச்சியர் என பலரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர். 

    நெடுவாசல் கிராம மக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் கடையில் இருப்பு உள்ள மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டவுடன் 18 ந் தேதி டாஸ்மாக் கடை மூடப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தனர். அதிகாரிகளின் உத்தரவாதத்தை ஏற்று அமைதியாக இருந்தனர். 
    இந்த நிலையில் 18 ந் தேதி திங்கள் கிழமை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் கடையை முற்றுகையிடுவோம் என்று கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் வழக்கமாக கடை திறக்கும் பகல் 12 மணி வரை பொதுமக்கள்  காத்திருந்தனர். ஆனால் 17 ந் தேதி இரவு பூட்டப்பட்ட கடை திறக்கவில்லை. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன், ஆலங்குடி வட்டாட்ச்சியர் ரெத்தினாவதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நெடுவாசல் கிராமத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நெடுவாசல் கிராம பிரதிநிதிகளை சந்தித்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 ந் தேதி வரை கால அவகாசம் கேட்கப்பட்டது. கிராமத்தின் சார்பில் அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து கிராமம் அமைதியானது. ஆனால் இனி மேலும் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம். இன்று மூடப்பட்டதுடன் நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூறினார்கள். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு அதன்படி செய்யலாம் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கூறினார். இதனால் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கும் அதிகாரிகளின் முயற்சியும் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இனிமேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் போராட்டங்களை நடத்துவோம் என்கின்றனர் பொதுமக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன" - பிஆர்.பாண்டியன்

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r. pandiyan about damages in delta districts

 

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் பி.ஆர்.பாண்டியன் இன்று  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு செய்தபின் பேசும்போது, "தமிழ்நாட்டில் வானிலை மையம் கூட கணிக்க முடியாத வகையில் பருவம் தப்பிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை  டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

அரசு உடனடியாக அந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

 

 

Next Story

"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r.pandiyan reqquest to neduvasal people

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந் தேதி காலை திட்டத்தைக் கைவிடக் கோரி அங்குள்ள கடைவீதியில் விவசாயிகள் 100 பேர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதன் பிறகு இது தொடர் போராட்டமாக மாறியது. நாடியம்மன் கோயில் ஆலமரத்திடல் போராட்டக் களமானது. அதுவரை போராட்டம் என்றால் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தான் வழக்கம். ஆனால் நெடுவாசலில் அப்படியே தலைகீழாக மாறி, போராட்டம் என்பது கலைத் திருவிழா போல நடந்தது. 

 

ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் உரைவீச்சு, சினிமா நட்சத்திரங்கள் எனப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. போராட்டக்களத்திற்கு வந்தவர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார்கள் போராட்டக் குழுவினர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டம் செய்தாலும் இந்த நூற்றாண்டில் நடந்த முக்கியமான அமைதி வழி போராட்டங்களில் ஒன்றாக மாறியது. இந்த போராட்டத்தின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நெடுவாசல் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இது பற்றி அவர் கூறும் போது, "நெடுவாசல் கிராமத்தில் வரலாறு காணாத போராட்டத்தைச் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பகுதி விவசாயிகள் காந்திய வழியில் நடத்தி உலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளனர். எதிர்காலத்தில் இனி விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது. எனவே நெடுவாசல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நெடுவாசல் கிராமத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் அமைப்பதாக  கிராம மக்கள் கூறியுள்ளனர்" என்றார்.