Skip to main content

உயிரே உன் விலை என்ன? அலட்சியத்தில் அதிகாரிகள்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

 

நெல்லை மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சியிலிருப்பவர் மைனாரிட்டி சமூகப்பிரிவைச் சேர்ந்த ஐயப்பன். மனைவி முத்து மாரியம்மாள். கிராமங்களில் மைக் செட் கூலியில் ஜீவனம் நடத்தி வரும் இவர்களுக்கு எம்.பி.ஏ. படிக்கும் மகன் பழனி நாராயணன் மற்றும் பி.காம் படிப்பிலிருக்கும் ரஞ்சிதா என்ற மகளும் உண்டு கஷ்டப்பட்ட நிலையிலும் இருவரின் படிப்பிற்கான செலவை செய்து வருபவர்.

கடந்த 02ம் தேதி அருகிலுள்ள கருத்தப்பிள்ளையூரில் மைக் செட் அமைத்துவிட்டு இரவில் தன் மொபட்டில் அந்த ஒதுக்குப் புற சாலையில் திரும்பி வந்திருக்கிறார். வழியில் வயல் வெளியையும், மேல் ஆம்பூர் குளத்தை இணைப்பதற்கான மதகு அமைப்பதற்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பெரிய சிமெண்ட் பைப் பொருத்தும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் பள்ளம் தொடர்பான எந்த ஒரு எச்சரிக்கைப் பலகையும் தடுப்புச் சுவரையும் காண்ட்ராக்டர் வைக்கவில்லை. பொறுப்பான பொதுப்பணித்துறையும் முக்கியமான இதைக் கவனிக்கவில்லை.

அந்த வழியில் வந்த ஐயப்பனின் மொபட் பக்கத்திலிருந்த மண் குவியலில் மோதி அப்படியே மொபட்டுடன் குழியில் விழ, பெரிய சிமெண்ட் பைப்பில் தலைமோதி நெருகலான பள்ளத்தில் விழுந்தவரின் உயிர் துடி துடித்துப் பறந்திருக்கிறது. அதிகாலையில் அந்தப் பக்கம் விவசாய வேலைக்குப் போனவர்கள் தகவல் தர, ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் கடையம் போலீசாரும், குடும்பத்தார்களும் வழக்கப்படி கடையம் போலீசிலும் வழக்குப் பதிவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை, ஸ்பாட்டில் எச்சரிக்கை அமைப்புகளில்லாததால் மரணம் சம்பவித்தது கண்டு காரணமான பொதுப்பணித்துறையினரை தொடர்பு கொண்டும் பலனில்லை.

பாதிக்கப்பட்ட ஐயப்பனின் மனைவி முத்து மாரியம்மாளிடம் தன்னால் முடிந்த நிவாரணத் தொகையைத் தனிப்பட்ட முறையில் கொடுத்து உதவிய எம்.எல்.ஏ. பூங்கோதை நடந்தவைகளை நிவாரணம் பொருட்டு அரசு வரை கொண்டு போயிருக்கிறார்.

சாலையைப் பிளந்து பெரிய பள்ளமைமத்து மதகு அமைக்கும் பொதுப்பணித்துறை மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட வேண்டிய குறைந்தபட்ச தடுப்ப சுவரும் அமைக்கவில்லை எச்சரிக்கை போர்டும் வைக்கவில்லை பறி போனது விலை மதிப்பில்லா ஒரு உயிர். அதற்கான உரிய நிவாரணம் கிடைக்காமல் விடமாட்டேன் என்கிறார் எம்.எல்.ஏ. பூங்கோதை.

பலியான ஐயப்பனின் சகோதரன் கணேசனோ. ஜெனரேட்டர் அமைத்து விட்டு பக்கத்து ஊர் செல்கிறேன் என்று மட்டும் இரவில் தகவல் சொன்னார். மறு நாள் காலை உடலை பார்த்தவர்கள் சொன்ன பிறகுதான் விஷயமே உரைத்தது என்றார் பதற்றத்துடன். பறி போனது கூலி வேலை பார்த்து பிழைப்பவரின் உயிர். உயிர்களில் சாதாரணமானவனின் உயிர் அசாதாரணமானவரின் உயிர் என்ற பேதம் கூடவே கூடாது. அது பேராபத்து. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.