Officials arrested people and removed encroachments

கடலூர் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம் கிராமங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த டிச.19-ஆம் தேதி அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இந்தப் பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஏற்கனவே மலையடிக்குப்பம் கிராமத்தில் சமையல் பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்தப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். பட்டா வழங்கக்கோரி அளித்த மனு பரிசீலனையில் உள்ளது. தற்போது, சுமார் 150 பேரின் வீடுகள் மற்றும் முந்திரி பயிா்கள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டோம். மக்கள் மீதான நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அனைவருக்கும் உரிய இலவச பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

மக்களின் வாழ்விடங்களை அப்புறப்படுத்த நினைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டுத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Advertisment

இதனை அடுத்து சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஜே.சி.பி வாகனங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.