
நெல்லையில் கோவில் நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திம்மராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக இந்து சமய நிலையத்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கல்யாண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தை மீட்டு மண்டபத்திற்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் சென்றனர். இதனையறிந்து அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மண்டபத்திற்குள் சென்று காவல்துறையினரையும், அறநிலையத்துறை அதிகாரிகளையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அங்கிருந்த ஒருவர் கையில் இருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அந்த வாக்குவாதத்தில் அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் அங்கிருந்த பலர் மேல் பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அங்கிருந்த அவர்களை மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.