Skip to main content

பழமை மாறாமல் கட்டடத்தை புதுப்பிக்க சொன்னா, பழமையான மரத்தை வெட்டிட்டாங்க... வேதனையில் மரங்களின் காதலர்கள்!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

ரர

 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான அரசு அலுவலகங்கள் பழமையான கட்டிடங்களிலேயே இயங்கி வருகிறது. இந்த கட்டிடங்கள் சரியான பராமரிப்புகள் இல்லாததால் பழுதடைந்து வருகிறது.

இந்த நிலையில் தான் கடந்த ஆட்சி காலத்தில் பழமையான அரசு கட்டிடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கட்டிடங்களின் மராமத்துப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதில் ஒன்று ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம். ஒரே கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம், தகவல் சேவை மையம், ஆதார் மையம், வட்ட வழங்கல் அலுவலகம் எனப் பல அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த கட்டிடத்தைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

 

பணிகளை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அதனால் பழைய சிமெண்ட் தண்ணீர் குழாய்களை அகற்றிவிட்டு பிளாஸ்டிக் குழாய்களைப் பொருத்திக் காவி வண்ணம் பூசி மறைத்துவிட்டனர். தொடர்ந்து அலுவலக வாசலில் பல நூறு பேருக்கும் பல வாகனங்களுக்கும் நிழல் கொடுத்துக் கொண்டிருந்த சுமார் 75, 80 ஆண்டுகள் பழமையான வேப்பமர கிளைகளை மொட்டையாக வெட்டிவிட்டனர். கட்டிடத்திலிருந்து 10  அடி தூரத்தில் பாதிப்பில்லாமல் நின்ற பழமையான மரத்தை இப்படி வெட்டிவிட்டார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள் மரங்களின் காதலர்கள். 

 

இது குறித்து மரம் வளர்ப்போர் சங்கம் மரம் தங்க.கண்ணன் நம்மிடம்... " ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் நின்ற பழமையான வேப்ப மரம் வெட்டப்படுவது அறிந்து வட்டாட்சியரிடம் கேட்டால் நான் வெட்டச் சொல்லவில்லை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேளுங்கள் என்கிறார். பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டால் எங்களுக்குத் தெரியாது யார் மரம் வெட்டியது?  புகார் கொடுங்கள் என்கிறார். கட்டிடத்தைப் பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரியும் வெட்டச் சொல்லவில்லை. கட்டிடத்தில் அலுவலகம் நடத்தும் வட்டாட்சியரும் வெட்டச் சொல்லவில்லை என்றால் யார் வெட்டச் சொன்னது? யார் வெட்டினார்கள் என்று தெரியவில்லை.

 

கட்டிடத்தை மராமத்து செய்யும் ஒப்பந்த நிறுவனத்தின் பொறியாளர் தான் அதிகாரிகளிடம் கேட்காமல் வெட்டியிருக்கிறார் என்கிறார்கள் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள். மரத்தின் இலைகள் கட்டிடத்தில் கொட்டுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் கட்டிடம் சேதமடைகிறது என்றும், மரம் இருந்தால் பறவைகைள் வந்து அமர்ந்து கட்டிடத்தில் விதைகள் விழுந்து முளைப்பதால் கட்டிடம் சேதமாகும் என்றும் ஒப்பந்த நிறுவன பொறியாளர் தான் மரம் வெட்டச் சொன்னதாகக் கூறுகின்றனர்.

 

பருவ காலநிலை மாற்றத்தால் வெப்பமடைதல் அதிகரிக்கிறது. அதனைச் சமாளிக்க அதிகமான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியதாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் போகுமிடமெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வருவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அவரது ஆலங்குடி தொகுதியிலேயே அவரது அலுவலகம் எதிரே உள்ள வட்டாட்சியர் அலுவலக வாசலில் நின்ற  பழமையான மரத்தை வெட்டியிருப்பது வேதனை அளிக்கிறது. மரத்தை வெட்டியவர்கள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

Next Story

''என் மரணமே கடைசியாக இருக்கட்டும்; கருணைக் கொலை செய்யுங்கள்'' - மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

mettupatti number 9 tamarind tree

வணக்கம்,

 

நான் புளியமரம் பேசுறேன்.. என் இயற்கைக்கு மாறான மரண கதையை கொஞ்சம் கேட்டுட்டு போங்க..

 

புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் மேட்டுப்பட்டி கேட் - ரைஸ் மில் இடைப்பட்ட இடத்தில் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிழல் தரவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பழம் தரவும், சாலை ஓரமாக என்னை நட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், தண்ணீர் ஊற்றி வளர்த்தனர். அப்ப எனக்கு நம்பர் 9. அந்த பகுதியில் யார் வீட்ல நல்லது, கெட்டது நடந்தாலும் என் நிழலில்தான் நிற்பாங்க. இதுவரை லட்சம் பேருக்கு நிழல் கொடுத்திருப்பேன். குழம்பு ருசிக்க பழம் கொடுத்தேன். லட்சக்கணக்கான விதை கொடுத்தேன்.

 

நான் வளர்ந்தது போல சாலையும் விரிவடையத் தொடங்கியது. அந்தப் பக்கம் நடந்து போறவங்களும், வாகனங்களில் போறவங்களையும் கவர்ந்து இழுக்கிறது மாதிரி கிளைகளைப் பரப்பி பசுமையான பச்சை இலை போர்த்தி வனப்பாக இருந்தேன். அத்தனை பேரும் என்னை பார்க்காமல் போக மாட்டாங்க.. அவ்வளவு அழகா இருப்பேன். எல்லாரும் என்னையே பார்க்கிறதைப் பார்த்த பெரிய பெரிய கடைக்காரங்க, பயிற்சி மையகாரங்க அவங்க கடை விளம்பர பதாகைகளை என் மேல கட்டினாங்க. அது காற்றில் பறந்தது. அப்புறம் ஆணி வச்சு அடிச்சு பதாகை வச்சாங்க. என் மேல ஆணி அடிக்கும் போது எனக்கு வலிக்கும் என்பதை அவங்க மறந்துட்டாங்க. காரணம் அவங்களோட கவர்ச்சியான விளம்பர பதாகையை எல்லாரும் பார்க்கிற மாதிரி வனப்பான மரத்தில் அடிச்சாச்சுன்னு மகிழ்ச்சி. இப்படியே நூற்றுக்கணக்கான ஆணிகள் அடிச்சதுல எனக்கும் வலி தாங்கல.

 

mettupatti number 9 tamarind tree


 

ஆணிகள் அடிச்சதுல உடலெங்கும் காயம்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கிட்டேன். இப்ப முழுமையாக இல்லன்னாலும் 99% செத்துட்டேன். இப்ப அந்த வழியாக போறவங்க இந்த 9 ம் நம்பர் மரம் பட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு, என் கிட்டக்கூட ஒதுங்க பயந்து ஓடிப் போறாங்க. நீங்களே சொல்லுங்க நானாக தற்கொலை செய்து கொண்டேனா? இல்லை என்னை கொஞ்சம் கொஞ்சமா ஆணி அடிச்சு கொன்றார்களா? ஆனால், என்னை வச்சு வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிருக்கு. அதனால தான் இளமையா இருக்கும் போது 9 ம் நம்பர்ல இருந்த என் மீது, இயற்கைக்கு மாறான சந்தேக மரணத்திற்கான ஐபிசி பிரிவு 174 போட்டு, என் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரிக்க சொல்லி இருக்காங்க.

 

மரணத்தின் கடைசி தறுவாயில் ஒரு கோரிக்கை நான் 99% உயிரிழந்துட்டேன். அதனால் என் நிழலில் நின்றவர்கள் கூட இப்ப என்னைப் பார்த்து பயந்து தூரமா போறாங்க. எனக்கே என் மீது சந்தேகம் வந்துடுச்சு. இதுவரை யாருக்கும் சிறு தீங்கும் செய்யாத நான், எந்த நேரத்திலும் என் கிளைகள் உடைஞ்சு விழுந்து சாலையில் போற யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுவேனோ என்ற அச்சம் எனக்குள்ளும் உள்ளது. அதனால என்னை வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளே என்னை கருணை கொலை செய்து மற்றவர்களை காப்பாற்றுங்கள். என்னை கருணைக் கொலை செய்வதோடு விட்டுவிடாமல் என்னோட இயற்கைக்கு மாறான மரணத்தை (ஐபிசி 174) முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நன்றாக விசாரித்து, என்னைப் போன்ற மரக்குழந்தைகளின் மேல் ஆணி அடிப்பதையும், அடியில் குப்பை கொட்டி எரிப்பதையும் தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலையோர மரக்குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற முடியும். என் மரணமே கடைசியாக இருக்கட்டும், நடவடிக்கை எடுங்கள். என்னை கருணைக் கொலை செய்து அந்த இடத்திலிருந்து அகற்றிய பிறகு, என் நினைவாக என்னைப் போல ஒரு புளிய மரக்குழந்தையை நட்டு வளருங்கள். அந்த மரக்குழந்தை வடிவில் மீண்டும் உங்களுக்கு நிழல் தருகிறேன்.

 

இதுவரை என் சோகக் கதை கேட்ட உங்க எல்லாருக்கும் நன்றிகள்.
அன்புடன்.. மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்.