திருச்சி விமான நிலையத்துக்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திவரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுவருகிறது. அதனை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திக் கண்டுபிடித்துவருகின்றனர். இந்தக் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்ததாக சுங்கத் துறை ஆய்வாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த மாதம் சுமார் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த வாரம் திருச்சி விமானநிலையத்தில் பணிபுரிந்த 8 ஆய்வாளர்கள், 8 கண்காணிப்பாளர்கள் என 16 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுங்கத் துறையில் துணை ஆணையராக பணிபுரிந்துவந்த சரவணகுமார், சுங்கத்துறை அலுவலகத்தின் வேறு பொறுப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக தீரேந்திரா வர்மா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் தங்க கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்த இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இன்னும் சில அதிகாரிகளை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் விமானநிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.