Skip to main content

உருவாக்கப்படாத தலைமை ஆசிரியர் பணியிடங்கள்; அதிகாரிகள் அலட்சியம் 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

officers do not create headmasters posting in primary schools 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர்களையே நியமிக்கப்படாமல் அலட்சியமாக உள்ளதால் மாணவர்களைச் சேர்க்கப் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

 

திருமயம் ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடி கிராமத்தில் அரசு உதவி பெறும் சரஸ்வதி கலாசாலை தொடக்கப்பள்ளியை அரசு ஏற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் கோலாகலமாக விழா நடத்தி திறந்து வைத்துள்ளார். ஆனால் இந்தப் பள்ளிக்கு 10 ஆண்டுகளாகவே தலைமை ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்படாமல் 2 இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டே செயல்படுகிறது. 2022-2023 கல்வி ஆண்டில் 32 மாணவர்கள் பயின்று வந்தார்கள்.

 

அதேபோல கறம்பக்குடி ஒன்றியம் முருங்கைக்கொல்லை கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமல் உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 35 ஆகும். இதே போல குன்றாண்டார் கோயில் ஒன்றியம் ஒடுக்கூர் ஊராட்சி கொட்டப்பள்ளம் கிராமத்திலும் 2018 ஆம் ஆண்டு புதிய அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. வட்டாரக்கல்வி அலுவலர்கள் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தனர். ஆனால் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமல் உள்ளது. இங்கு 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதே கல்வி ஆண்டில் அன்னவாசல் ஒன்றியம் உய்யக்குடிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு இடைநிலை ஆசிரியருடன் பள்ளி செயல்படுகிறது. இங்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 24 ஆகும். இப்படி பல பள்ளிகள் உள்ளன.

 

இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, "தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களின் சிரமங்களை தவிர்த்து அனைவரையும் கல்வி கற்க வைக்கும் நல்ல எண்ணத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள பள்ளி வயது குழந்தைகளின் எண்ணிக்கையில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. அந்த புதிய பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் உருவாக்கி அரசுக்கு தெரியப்படுத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசாணை இருந்தும் கூட அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படாமல் உள்ளது வேதனையாக உள்ளது.

 

அரசின் 7.5% இட ஒதுக்கீடு அறிவிப்பு மற்றும் கொரோனா காலத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின்  சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் கவனக்குறைவால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யாவிட்டால் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படும்" என்றனர். தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கலாம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.