ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாற்றும் ஊழியரை அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது ஆண்டாள் கோவில். புகழ்பெற்ற திருத்தலமான இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். இக்கோவிலில் கணக்கராக பணியாற்றும் சுப்பையா என்பவர், ஊழியர்களை அவமரியாதையாக பேசுவதாகவும், நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கோவில் ஊழியர் ஒருவரை சுப்பையா காலால் எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இது குறித்து விசாரணை நடத்தி, சுப்பையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.