Skip to main content

மிரட்டுகிறார்கள்...! கலெக்டரிடம் கதறிய பெண் தாசில்தார்!

Published on 06/05/2018 | Edited on 06/05/2018
cauvery


காவி்ரி மேலாண்மைக்காக போராடிக்கொண்டிருக்கிற இந்த நிலையில் தமிழக அரசு மணல் குவாரிகள் அமைக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த நிலையை பயன்படுத்தி திருச்சியில் காவிரி கரையோர பகுதிகளில் கல்லணை கால்வாய்களில் சட்ட விரோதமாக தொடர்ந்து மணல் எடுத்துக்கொண்டே இருப்பதாகவும், இதற்கு அந்த பகுதி அதிகாரிகள் ஆசியோடு தான் நடக்கிறது என்றும் புகார் எழுந்தது.
 

இந்த நிலையில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக்காக திருச்சி கலெக்டர் ராஜாமணி வந்தார். அப்போது ஒன்றிய அலுவலகத்தின் மூலம் திருவெறும்பூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார். 
 

பின்னர் பாரத பிரதம மந்திரியின் கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்தின் கீழ் அரசங்குடி ஊராட்சி முடுக்குப்பட்டியிலிருந்து கிளியூர் வரை 6 கிமீ சாலை ரூ.2.30 கோடியில் புதுப்பிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 

அப்போது கிளியூர் ஊராட்சி கீழவிழங்குளம் மற்றும் அண்ணாநகர் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் எடுத்து செல்வதற்காக சாலையோரம் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த அண்ணாநகர் பகுதி பொதுமக்களிடம் யார் அனுமதியில்லாமல் மணல் அள்ளினாலும் போலீசாரிடம் பிடித்து கொடுப்பதுடன் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விடுவோம் என சொல்லுங்கள். இதுவே கடைசி தடவை என்று எச்சரித்தார். 
 

பின்னர் தாசில்தார் ஷோபாவிடம் சாலையில் கொட்டப்பட்டுள்ள மணலை தினமும் லாரி வைத்து அள்ளுங்கள் என உத்தரவிட்டார். கிளியூர் அருகே வலதுபுறம் உள்ள வெண்ணாற்றில் மணல் திருட்டு நடக்கும் இடத்தை பார்வையிட்டு மாட்டு வண்டிகள் வெண்ணாற்றில் இறங்கும் பாதையில் உடனடியாக கான்கிரீட் தடுப்பு கட்டை அமைக்கும்படி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அப்போது இவ்வளவு மணல்கொள்ளை நடப்பதை எப்படி தடுக்காமல் இருந்தீர்கள் என்று தாசில்தாரிடம் கேட்டார். அதற்கு அவர், மணல் எடுப்பதை தடுத்தால் மணல் கொள்ளையர்கள் தன்னை மிரட்டுகிறார்கள் என கதறினார். அதற்கு கலெக்டர் தினமும் இந்தப் பகுதியில் கூடுதல் ஆட்களை வைத்து ரெய்டு நடத்துங்கள் என்றார். 
 

மேலும் கிளியூரில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமாக உள்ளவர்கள் என 100 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய சொல்லுங்கள். பி்டிபடும் மணல் வண்டிகள் அனைத்தையும் எனது உத்தரவில்லாமல் விடுவிக்காதீர்கள் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இங்கு எடுக்கப்படும் மணல் எந்த வழியாக வெளியில் போகிறதோ அந்த வழியில் உடனடியாக தடுப்பை ஏற்படுத்துங்கள் என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.