Skip to main content

“விஜயகாந்த்தின் இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்” - ஓ.பன்னீர்செல்வம்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
O. Panneerselvam condoles vijaykanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும், விஜயகாந்தின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குவிந்திருந்த பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து, விஜயகாந்திடன் உடலை தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்தவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

'புரட்சிக் கலைஞர்' என்றும், 'கேப்டன்' என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்புச் சகோதரர் விஜயகாந்த் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர். சாதி, மத பேதமின்றி ஏழையெளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் பல நிகழ்ச்சிகள் மூலம் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒரு இருட்டறை, ரமணா, வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், அம்மன் கோயில் கிழக்காலே, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் போன்ற வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். தனியாக ஒரு கட்சியைத் துவக்கி, சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்த பெருமை இவருக்கு உண்டு. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் விஜயகாந்த். அவருடன் அரசியல் ரீதியாக நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. இவரது இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்.

விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை உடனிருந்து கண் இமை போல் காத்தவர் அவரது மனைவி அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன். அன்புச் சகோதரர் விஜயகாந்தை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்துக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.