Skip to main content

சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை...!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Nutrition organizer needs time to apply for chef jobs ...!

 

மாநிலத்தில் பல மாவட்டங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உதாரணத்திற்குக் கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகக் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

 

அதன்படி சத்துணவு அமைப்பாளர் பணிக்குப் பொதுப்பிரிவினர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 21லிருந்து 40 வயதிற்குள் வயது வரம்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எஸ்.சி மக்கள், எட்டாம் வகுப்பு படிப்பு தகுதியும் 18 முதல் 40 வயதிற்குள் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சமையலர் பணியிடத்திற்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் எட்டாம் வகுப்பு படிப்பும் 21 முதல் 40 வயதுக்குள் வயது வரம்பு இருக்கவேண்டும். ST மக்கள், எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதும். உதவியாளர் பணியிடத்திற்குப் பொதுப்பிரிவு மற்றும் SC மக்கள் ஐந்தாம் வகுப்பு படிப்பு இருந்தால் போதும். அதேபோல் ST மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதும். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

 

விண்ணப்பிக்கப்படும் காலி பணியிடத்திற்கு அவரவர்கள் வசிப்பிடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும். இதில் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதிற்குள்ளும் மாற்றுத்திறனாளிகள் 43  வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும் இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களிலும் நகராட்சி அலுவலகங்களிலும் நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

விண்ணப்பிக்கப்படும் மையம், கிராமப் பகுதியாக இருந்தால் அந்தந்த ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓக்களிடமும் நகராட்சி பகுதியாக இருந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி கமிஷனரிடமும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்கான நேர்முகத் தேர்வு நடக்கும் நாள் விவரம் ஆகியவை கடிதங்கள் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, வயது, ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றுகள், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் விதவை, கணவனால் கைவிடப்பட்டவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்களில் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

இதேபோன்று விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற பல மாவட்டங்களில் மேற்படி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம் விண்ணப்பிக்கும் நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம், இந்த அறிவிப்பு 26ஆம் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி தேதி அக்டோபர் 1ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான தேதிக்கும் விண்ணப்பம் செய்திடக் கடைசி தேதியான 1ஆம் தேதிக்கும் இடையில் நான்கு நாட்களே உள்ளன. 

 

அதில் சனி ஞாயிறு விடுமுறை நாளாக உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதில் இணைப்பதற்கான சான்றுகளைப் பெறுவதற்கும் அதை நகலெடுக்கவும் அவைகளில் கெசட்டட் ரேங்கில் உள்ள அலுவலர்களிடம் சான்றொப்பம் வாங்குவதற்கும் காலதாமதமாகும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அக்டோபர் 1 என்று இருப்பதை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.